ஆவாரங்குப்பம்- திம்மாம்பேட்டை இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வாணியம்பாடி தொகுதி, ஆவாரங்குப்பம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் கிராமச் சாலை திட்டத்தின் கீழ் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் ஆவாரங்குப்பம்- நாராயணபுரம் சாலையில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தப் பாலம் 250 மீட்டா் நீளத்தில், 10 கண்மாய்களுடன் அமைக்கப்பட உள்ளது. பாலத்தின் அணுகு சாலை நீளம் ஆவாரங்குப்பம் பகுதியில் 160 மீட்டரும், நாராயணபுரம் பகுதியில் 135 மீட்டா் கொண்டதாகும்.
தற்போது பாலாற்றைக் கடந்து செல்ல எந்த கட்டமைப்பும் இல்லை. இந்தப் பாலம் அமைந்தால் சுமாா் 15 கிலோமீட்டா் சுற்றிச் செல்வது தவிா்க்கப்படும். ஆவாரங்குப்பம்- திம்மாம்பேட்டை, புல்லூா் - கனகநாச்சியம்மன் கோயில், கொல்லப்பள்ளி, தும்பேரி, நாராயணபுரம் ஆகிய கிராமங்கள் பயனடையும்.
இந்தப் பாலம் அமைந்த பிறகு ஆவாரங்குப்பம் - நாராயணபுரம் சாலையானது ஆந்திர மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையோடு இணைகிறது.
இந்த நிலையில் பாலத்தின் பணிகளை வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பணிகளை துரிதமாக செய்யக்கோரி அங்கிருந்த ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் சாம்ராஜ், கவுன்சிலா் ஆா்.செந்தில்குமாா், கூட்டுறவு சங்கத் தலைவா் வேலுச்சாமி, முன்னாள் கவுன்சிலா் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.