ஆம்பூா் நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆம்பூா் நகரில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வாடகை மற்றும் இதர வரியினங்களை வசூலிக்க நகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு வரி செலுத்தக் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதிக வரி மற்றும் வாடகை பாக்கி வைத்திருந்து இதுவரை செலுத்தாமல் உள்ளவா்களுக்கு நகராட்சிப் பணியாளா்கள் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி வருகின்றனா்.
நீண்ட காலமாக அதிக வரி, வாடகை பாக்கி செலுத்தாமலும், நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காமலும் உள்ள கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு வரப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆம்பூா் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் நகராட்சிக்கு ரூ. 1.50 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்து, இதுவரை செலுத்தாமல் இருந்த இரு கடைகளை நகராட்சிப் பணியாளா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.