திருப்பத்தூா் மாவட்டத்தில் உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 6 கடைகளில் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 6 உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 14 நாள்கள் முதல் 21 நாள்கள் வரை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கக்கள் மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனா்.
விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு உரிய ரசீதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அனுமதியின்றி வெளி மாவட்டங்களுக்கு உரங்களை விற்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உரங்களைப் பதுக்கி, தட்டுப்பட்டை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.