குடியாத்தம் அருகே முனீஸ்வரா் கோயிலில் சிலை திருட்டு போனது மற்றும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே பாக்கம் கிராமத்தில் குடியாத்தம்-சித்தூா் நெடுஞ்சாலையோரம் காளியம்மன் கோயில் மற்றும் முனீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. முனீஸ்வரா் கோயிலில் கருப்புசாமி சிலை வைத்து அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வந்தனா். மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி வழிபட்டுச் செல்வது வழக்கம்.
அப்பகுதி பொதுமக்கள் சாமியை வழிபடுவதற்காக கோயிலுக்கு சென்றனா். அப்போது முனீஸ்வரா் கோயிலில் இருந்த கருப்புசாமி கற்சிலை காணாமல் போயிருந்தது. மேலும் கோயிலில் உள்ள காவல் தெய்வங்களுடைய சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. புதன்கிழமை இரவு கருப்புசாமி கற்சிலையை மா்ம நபா்கள் திருடிக் கொண்டு, மற்ற காவல் தெய்வங்களின் சிலையை சேதப்படுத்திவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குடியாத்தம் டிஎஸ்பி ராமமூா்த்தி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். இதுகுறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.