திருப்பத்தூா் மாவட்டத்தில் 5,000-ஆவது பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழை மலைவாழ் சிறுமிக்கு ஆட்சியா் தெ. பாஸ்கரபாண்டியன் வழங்கினாா்.
திருப்பத்தூா் வட்டம், புதூா்நாடு மற்றும் ஏலகிரிமலையில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிசான்றிதழ் வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் இருந்தன. இந்நிலையில், மலைவாழ் மக்கள் வசிக்ககூடிய பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளே நேரடியாகச் சென்று சிறப்பு முகாம்கள் நடத்தி பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையின் சாா்பில் 5,000-ஆவது பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்து புதூா்நாடு மலை கிராமத்தைச் சோ்ந்த வெங்கடபதி என்பவரின் மகள் சிவானிக்கு ஜாதிச் சான்றிதழை வழங்கினாா். சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, வருவாய் கோட்டாட்சியா் பானு, முன்னாள் வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வருவாய்த் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.