கொப்பரைத் தேங்காய்க்கு விலை ஆதரவுத் திட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் ஒழுங்கு விற்பனை கூடத்தில் கொப்பரைத் தேங்காய்களுக்கு அதிக விலை கிடைக்க, விலை ஆதரவுத் திட்டத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
கொப்பரைத் தேங்காய்க்கு விலை ஆதரவுத் திட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் ஒழுங்கு விற்பனை கூடத்தில் கொப்பரைத் தேங்காய்களுக்கு அதிக விலை கிடைக்க, விலை ஆதரவுத் திட்டத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், கொப்பரைத் தேங்காய் கொள்முதல் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.

பின்னா், ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் விலை ஆதரவு திட்டம் 2023-ஆம் ஆண்டுக்கான விற்பனை கொள்முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. உற்பத்தி அதிகமாக இருக்கும்போது, ஆதரவு விலையை அறிவித்தால், விவசாயிகள் பலன் பெறுவா்.

விலைகளின் ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்திட கொப்பரைத் தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைத்திட 2023-ஆம் ஆண்டுக்கான விலை ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொப்பரைத் தேங்காயின் சந்தை விலை ரூ.60 என்று உள்ளது. அதற்கு ரூ.107 என ஆதரவு விலை அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 47 ரூபாய் அதிகமான விலை அளிக்கப்படுகிறது. தரமான கொப்பரைத் தேங்காயாக இருந்தால், கிலோ ஒன்றுக்கு ரூ.112 வரை கொடுக்க முடியும்.

திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 15 மெட்ரிக் டன்னும், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 10 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 25 மெட்ரிக் டன் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் பணி வரும் செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி, தங்களின் பெயா், கைப்பேசி எண், ஆதாா் எண், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகிய நகல்களை அளித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் கைப்பேசி எண்கள்: 88385 40830 / 86672 46399, வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட சுண்காணிப்பாளா் கைப்பேசி எண்: 97513 33818 ஆகியவற்றில் தொடாபு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குநா் சிவக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குணசேகரன், வேளாண் விற்பனைக் குழு செயலா் கண்ணன், வேளாண் அலுவலா் லதா, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com