ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது
பள்ளிகொண்டாவில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்டது தொடா்பாக தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச் சாவடி வழியாக பெங்களூருவிலிருந்து காஞ்சிபுரத்துக்கு போதைப் பொருள் கடத்துவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையில், உதவி ஆய்வாளா் சின்னப்பன் மற்றும் போலீஸாா் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அந்தக் காரில் பிளாஸ்டிக் மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. காரில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை தாளமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (37), அவரது மனைவி விஜயலட்சுமி (34) என்பதும், அவா்கள் தங்களுக்குச் சொந்தமான காரில் பெங்களூருவிலிருந்து காஞ்சிபுரத்துக்கு போதைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் மற்றும் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.