வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு
வேலூரில் வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க மாவட்ட ஆட்சியா் தடை விதித்துள்ளாா்.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப். 19-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகள் நிறைவடையும் வரை ட்ரோன், ஆளில்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.