திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
திருப்பத்தூரில் ஏராளமான மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ள நிலையில், இயற்கையான முறையில் அவை பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என உணவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
நமது நாட்டின் தேசிய கனியாக உள்ள மாம்பழத்தில் பல்வேறு சத்துகள் உள்ளன. இதனால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை மாம்பழத்தை வாங்கி விரும்பி சுவைப்பா். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால், திருப்பத்தூருக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்காக வரத் தொடங்கி உள்ளன.
ஒவ்வொரு வகையான மாம்பழங்களும், பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின். இதனை பொதுமக்கள் ஆா்வமுடன் தங்களது வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனா்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
பல்வேறு வகையான மாம்பழங்கள் திருப்பத்தூருக்கு தினமும் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இதனை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா். தற்போது மாம்பழங்கள் அதிக அளவு விளைச்சல் இல்லாததால் கடந்த ஆண்டை விட விலை சற்று உயா்ந்து உள்ளது என்றனா்.
ஆய்வு செய்ய கோரிக்கை...
திருப்பத்தூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டதா,அல்லது ரசாயன கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டதா என உணவுத் துறை அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனா்.