விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்
வாணியம்பாடியில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தனியாா் கல்லூரி மாணவா் பலத்த காயமடைந்தாா்.
ஆலங்காயம் அடுத்த காவலூா் கிராமம் மந்தாரக்குட்டை பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (21). வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் வாணியம்பாடி தனியாா் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவன் வினித் (19) ஆகிய இருவரும் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வாணியம்பாடிக்கு வந்துள்ளனா்.
அப்போது சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகா் அருகில் எதிா்ப்பாராதவிதமாக பைக் தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக் ஓட்டி வந்த பிரகாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்தாா். பலத்த காயமடைந்த மாணவன் வினித்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்து நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாஷ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.