ஏலகிரி மலை கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு
ஏலகிரி மலை கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா. நந்தகோபால், ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலைப்பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீா் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பள்ளக்களியூா், அத்தனாவூா் ஆகிய பகுதிகளில் அரசு நிலப்பரப்பில் உள்ள நீா் ஆதாரமுள்ள ஆழ்துளை கிணறுகள் வாயிலாக நாள்தோறும் தேவைக்கு ஏற்றவாறு வாகனங்கள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அப்பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையருமான இரா. நந்தகோபால், ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குடிநீா் விநியோகம் முறையாக செய்யப்படுகிறதா என கேட்டறிந்தனா். அதையடுத்து அப்பகுதிக்கு தேவையான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஷ்வரி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.