திருவள்ளூரில் அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதற்காக ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்தவர்கள் தங்க இடவசதி இன்றி தவித்தனர். இதையடுத்து யாத்ரீகர்களுக்கு தங்கும் விடுதி அமைத்துத் தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர், சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலுக்கு வருவது வழக்கம். இரவு தங்கி காலையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நேர்த்திக் கடனை நிறைவேற்றிச் செல்வார்கள்.
கோயில் வளாகத்தில் உள்ள ஒரே ஒரு விடுதியில் மாலை 6 முதல் 7 மணிக்குள் நிரம்பி விடுகிறது. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் அதிக பணம் செலவழித்து தங்குகின்றனர்.
இதையொட்டி லாட்ஜ்களில் அமாவாசையன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். வசதியற்றவர்கள் கோயிலைச் சுற்றியுள்ள கடைகளின் வாசல்களிலும், கோயில் படிக்கட்டுகளிலும் படுத்துக் கொள்கின்றனர்.
இதுபோல் உறங்கும்போது உடமைகள் திருடு போகும் அபாயமும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும் ஏற்படுகிறது. மேலும் அவர்கள் மழையிலும், குளிரிலும் அவதியடைகின்றனர்.
எனவே திருவள்ளூர் நகராட்சி நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து யாத்ரீகர்கள் விடுதி அமைத்துத் தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.