

திருத்தணி பச்சரிசி மலை பாறைகளுக்கு இடையில் சிக்கித் தவித்த பள்ளி மாணவரை தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
திருத்தணியை அடுத்த கிழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் (17). இவர், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில்,
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க பெரும்பாலான ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து சென்றுவிட்டனர்.
ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளிக்கு வந்த ராகேஷ், அவரது வகுப்பு நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, திருத்தணி பச்சரிசி மலைக்கு சென்றார். அப்போது, மாணவர்கள் பாறைகள் மீது ஏறி, மலைக்கு சென்றபோது பாசி நிறைந்த பாறை வழுக்கியதில், ராகேஷ் தடுமாறி உருண்டு விழுந்தார்.
இதில், அவரது கால்கள் பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டன. அவரை மீட்க உடன் வந்த நண்பர்கள் முயற்சி செய்தனர். இருப்பினும் மீட்க முடியவில்லை. இதனால், அவர்கள் அச்சமடைந்து, அங்கிருந்து ஓடிவிட்டனர்.
மலையில் தனியாக தவித்த ராகேஷ், தான் வைத்திருந்த செல்லிடப்பேசி மூலம், இதுகுறித்து பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் திருத்தணி போலீஸாருக்கும்,
தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி, ராகேஷை பத்திரமாக மீட்டனர். பின்னர், அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த
சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.