மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 12th February 2019 05:09 AM | Last Updated : 12th February 2019 05:09 AM | அ+அ அ- |

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 15 பேருக்கு ரூ. 80,970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் திங்கள்கிழமை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அந்த வகையில் நிலம் சம்பந்தமாக 98, சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக 72, கடனுதவி 6, குடும்ப அட்டை 5, வேலைவாய்ப்பு 21, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் 5, சட்டம் மற்றும் ஒழுங்கு 13, ஊரக நகர்ப்புற வளர்ச்சி 21, இதர துறைகள் சம்பந்தமாக 28 என மொத்தம் 269 மனுக்கள் வரை அளிக்கப்பட்டன. இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் தொழுநோயால் உடல் மாற்றுத்திறன் அடைந்து மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 பேருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக தலா ரூ. 8,000 வீதம் மொத்தம் ரூ. 32 ஆயிரத்துக்கான காசோலைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் ரூ. 41,800 மதிப்பிலும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ. 7,170 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, சிறுசேமிப்புத் திட்டத்தில் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அளவில் சிறுசேமிப்பு வசூலில் சிறப்பிடம் பெற்ற நிலை முகவர்கள், மகளிர் முகவர்கள் ஆகியோருக்கு தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் கேடயங்களையும் அவர் வழங்கினார்.