சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் : கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 04:33 AM | Last Updated : 04th January 2019 04:33 AM | அ+அ அ- |

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள அரசைக் கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர்கள் ராஜ்குமார், அஷ்வின், மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சபரிமலையில் போலீஸார் பாதுகாப்புடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் சப்ளை அலுவலர் பிந்து ஆகிய 2 பெண்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள அரசைக் கண்டித்து அக்கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்டச் செயலர்கள் கருணாகரன், பாலாஜி, மாவட்ட இளைஞர் அணி செயலர் ஆர்யா சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகரத் தலைவர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
காஞ்சிபுரத்தில்...
சபரி மலை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வணிகர் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இதில், ஆர்எஸ்எஸ் சேவா பிரிவு மாநில இணைச் செயலர் ஆர்.பிரகாஷ், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் பாலசுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் கேரள அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.