குடிநீர் தட்டுப்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு
By DIN | Published On : 14th June 2019 03:46 AM | Last Updated : 14th June 2019 03:46 AM | அ+அ அ- |

அம்மையார்குப்பம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
கோடைக் காலம் தொடங்கியதில் இருந்தே ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மையார்குப்பத்தில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் குடிநீருக்கு கடும் அவதிப்படுகின்றனர். அவர்கள் சீரான முறையில் குடிநீர் வழங்கக் கோரி கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குலசேகரன், அம்மையார்குப்பத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் தெரு, பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் தடையின்றி குடிநீர் வழங்கவும், நீர்மட்டம் இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.