பழவேற்காட்டில் உள்ள செஞ்சியம்மன்நகர், அரங்கன்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் பேரிடர் கால பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை திருவள்ளூர் மாவட்ட அலுவலர் சுப்பிரமணி, பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் பங்கேற்றனர். இதில், பாதுகாப்பு ஒத்திகையை தீயணைப்பு படை வீரர்கள் பொதுமக்கள் முன்பு செய்து காட்டினர். அப்போது தண்ணீரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, பெண்கள் சமையல் செய்யும்போது ஏற்படும் தீ விபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வது, சேலையில் தீப் பிடித்தால் அதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.