சாலையில் சமைக்கும் போராட்டம்
By DIN | Published On : 19th May 2019 04:35 AM | Last Updated : 19th May 2019 04:35 AM | அ+அ அ- |

அம்மையார்குப்பம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலையில் சமைக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அம்மையார்குப்பம் வள்ளலார் நகரில், கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி - அம்மையார்குப்பம் செல்லும் சாலையின் நடுவே பந்தல் அமைத்து சமையல் செய்து சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர்.
அங்கு வந்த போலீஸார், ஊராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில், டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.