கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் ஊராட்சியில் ஆரணி ஆற்றின் நடுவே போடப்பட்டுள்ள தடுப்பணை அருகே ஆரணி ஆற்றங்கரையில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் ஆக்ரமிக்கப்பட்ட அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் ஊராட்சியில் ஆரணி ஆற்றின் கரையோரம் பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடமும், பழைய கட்டிடமும் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டரை ஏக்கர் பரப்பிலான நிலத்தை ஏ.என்.குப்பம் ஊராட்சி ஆர்.என்.கண்டிகையை சேர்ந்த கோவிந்தன் என்பவர் ஆக்ரமித்து மல்லி பூ தோட்டம் வைத்தும், பொதுப்பணித்துறையின் பழைய கட்டிடத்தை மாட்டு தொழுவமாகவும் 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் சிவகுமார், உதவியாளர் கஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் காமாட்சி, மற்றும் காவல் துறை முன்னிலையில் ஆக்ரமிப்புகளை அகற்றி அந்த பழைய கட்டிடத்தையும் அகற்றினர். இந்த ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் அரசுக்கு சொந்தமான ஒன்றரை கோடி மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் ஏ.என்.குப்பம் ஊராட்சியை ஒட்டி மேலும் பல ஆக்ரமிப்புகளை அரசு அகற்ற வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.