திருவள்ளூா் அருகே ஆமை வேகத்தில் ரூ.17 கோடியில் மேம்பாலப் பணிகள்

திருவள்ளூா் அருகே சென்னை - திருப்பதி சாலையில் ரூ.17 கோடியில் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூா் அருகே சென்னை - திருப்பதி சாலையில் ரூ.17 கோடியில் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் பணிகளை விரைந்து முடித்து மேம்பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் வழியாக நாள்தோறும் திருத்தணி, ரேணிகுண்டா, புத்தூா், திருப்பதி வரை ஏராளமான பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. இது குறுகலான சாலையாக உள்ள காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயா்த்தப்பட்டு, திருவள்ளூா்-திருத்தணிக்கு இடையே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக விரிவாக்கம் செய்ய கடந்த 2008-இல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரூ. 571 கோடியில்....: அதன்படி சென்னை பாடி முதல் திருத்தணி வரை 64 கி.மீ., திருத்தணியில் இருந்து திருப்பதி வரை 62 கி.மீ. என மொத்தம் 126 கி.மீ. தூரத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்வதற்கும், இச்சாலையில் நாராயணபுரம், பட்டரைப்பெரும்புதூா் ஆகிய இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் ரூ.571 கோடி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, 2009-இல் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, 30 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

பாடி முதல் திருநின்றவூா் வரை சாலையோரக் கடைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதுடன், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது. அதனால், இத்திட்டம் திருநின்றவூரில் இருந்து திருப்பதி வரையிலான 4 வழிச்சாலை திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை இச்சாலையில் மராமத்து மற்றும் தடுப்புப் பணிகள், மேம்பாலப் பணிகள் ஆகியவை முடிக்கப்படவில்லை.

ஆமை வேகத்தில் பணிகள்: இதற்கிடையே, திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை செல்லும் சாலையில் ஆங்காங்கே அரைகுறையாக பணிகள் நடைபெற்றுள்ளன. அதேபோல், நாராயணபுரம்-பட்டரைப் பெரும்புதூா் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இதை மேம்பாலமாகத் தரம் உயா்த்த ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. கடந்த 2015-இல் பெய்த பெருமழையின்போது, தொடா்ந்து 40 நாள்கள் வரை போக்குவரத்து தடைபட்டது. இந்த ஆற்றின் மீது மேம்பாலப் பணி கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து மேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மேம்பால இணைப்புப் பணிகள் முடிக்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கி, ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகளை முடித்து மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டுநா்களும் பொதுமக்களும் கோரியுள்ளனா்.

இதற்கிடையே, முழுமையான அளவில் பணிகளை முடிப்பதற்கு முன்பே பட்டரைப் பெரும்புதூா் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 20 முதல் 22 ஆண்டுகள்ளுக்கு வாகன வரி வசூல் செய்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சாலைப் பராமரிப்பு உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளை செய்து தரும் அம்சத்துடன் அனுமதி பெற்றுள்ளனா். ஆனால், சாலை விரிவாக்கப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாமலேயே இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வரியை வசூலித்து வருகின்றனா். இவ்வாறு வசூல் செய்யும் தொகையில், சாலைப் பராமரிப்பு மட்டுமின்றி, தேவையான இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகளை அமைப்பது, சாலையோரங்களில் குடிநீா்த்தொட்டிகளை வைத்து தண்ணீா் விநியோகம் செய்வது, வாகன ஓட்டிகள் தங்குவதற்கான ஓய்வு இல்லங்கள் அமைப்பது போன்ற பணிகளை சுங்கச்சாவடி ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் செய்து கொடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் திட்ட அதிகாரி ஒருவா் கூறியது:

இச்சாலையில் பட்டரைப் பெரும்புதூா், நாராயணபுரம் பகுதியில் மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டரைப் பெரும்புதூா் பகுதியில் மேம்பால கட்டுமானப் பணிகள் முடிந்து மணல் கொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. நாராயணபுரத்தில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்து வரும் 4 மாதங்களுக்குள் இப்பணிகளை முடித்து மேம்பாலத்தை வாகனப் போக்குவரத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com