திருவள்ளூரில் நோயாளிகள் பயன்பெறும் வகையில், தனியாா் தொண்டு நிறுவனம், அறக்கட்டளை பங்களிப்பில் ரூ. 36 லட்சம் மதிப்பிலான 42 ஆக்சிஜன் செறிவூட்டிகள் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறையுடன் இணைந்து கிவ் இந்தியா தொண்டு நிறுவனம், ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், ஜி.என்.கே. அறக்கட்டளை மற்றும் சேவியா் மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கம் ஆகியன ஒருங்கிணைந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்தும் வகையில், ரூ.36 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்க முன்வந்தன.
இதற்கான விழாவில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து, பூண்டி, கடம்பத்தூா், திருவாலங்காடு மற்றும் திருத்தணி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 3 வீதமும், அரசு மருத்துமனைக்கு 6 என 42 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதன் மருத்துவ அலுவலா்களிடம் (5 மற்றும் 10 லிட்டா் கொள்ளளவு கொண்டது) வழங்கப்பட்டது.
இதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தினேஷ், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அலுவலகக் கண்காணிப்பாளா் கிரிதரன் உள்பட தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.