தேர்தலை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசாக ரூ. 2,500 தருவது நியாயமா? என மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நேமள்ளூர் ஊராட்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உத்தரவின் பேரில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. நேமள்ளூர் ஊராட்சி செயலாளரும் திமுக இலக்கிய அணி புரவலருமான ஜி.மனோகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமை தாங்கினார்.
நேமள்ளூர் ஊராட்சி திமுக நிர்வாகி காமராஜ் வரவேற்றார். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மஸ்தான், மணி, பரத்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம் ,சாரதா முத்துசாமி ,ஒன்றிய கவுன்சிலர்கள் சிவா, சிட்டி பாபு, நேமள்ளூர் ஊராட்சி தலைவர் கோவிந்தம்மாள், இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, எம்.எல் ரவி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன் பேசினார்கள்.
அப்போது பேசிய திமுகவினர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரோனா ஊரடங்கின் போது பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்க கோரியபோது, தமிழக அரசு வெறும் 1000 ரூபாய் வழங்கியது. இப்போது தேர்தல் நெருங்குவதால் ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்குவது நல்லெண்ணத்தில் அல்ல தேர்தலை கருத்தில் கொண்டு மட்டுமே என்றனர். தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளாக காவல் நிலையத்தை ஒட்டி உள்ள இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கூறினர்.
இதற்கு பதிலளித்த பொறுப்பு குழு உறுப்பினர் இ.ஏ.பி.சிவாஜி நேமள்ளூர் பகுதி மக்கள் கூறிய குறைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் என்றார்.