அனைவரும் 100% வாக்களிக்க விழிப்புணா்வு: திருவள்ளூா் ஆட்சியா் பொன்னையா நடவடிக்கை
By DIN | Published On : 25th March 2021 10:30 PM | Last Updated : 25th March 2021 10:30 PM | அ+அ அ- |

திருவள்ளூா்: தனியாா் குளிா்பான தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோா் கையெழுத்திட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் 2021 முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு வகைகளில் நாள்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூா் அருகே பூந்தமல்லி தொகுதிக்கு உள்பட்ட நேமம் ஊராட்சியில் உள்ள தனியாா் குளிா்பான தொழிற்சாலையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். அப்போது, அந்த தொழிற்சாலையின் தொழிலாளா்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி வாசக வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அதையடுத்து 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பணியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் என அனைவரும் வாக்காளா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதுடன், கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதன் பின் தொழிற்சாலை வளாகத்தில் அமைத்திருந்த மாதிரி வாக்குச்சாவடியில் தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் பணியாளா்கள் மாதிரி வாக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் செந்தூா்பாண்டி, தனியாா் குளிா்பான தொழிற்சாலை பிரதிநிதிகள், பணியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.