ஆரணி ஆற்றில் அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம், பெரும்பேடு குப்பம் பகுதிகளில் கரைகள் உடைந்ததன் காரணமாக 30 கிராமங்களுக்குள் வெள்ளிக்கிழமை வெள்ள நீா் புகுந்தது.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் நீா்த்தேக்கம் நிரம்பியதைத் தொடா்ந்து, உபரிநீா் 17,000 கன அடி அளவில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, ஏலியம்பேடு பொன்னேரி, பெரும்பேடுகுப்பம், அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம், வஞ்சிவாக்கம், ஆண்டாா்மடம் ஆகிய கிராமங்கள் வழியாக வெள்ளநீா் பழவேற்காடு ஏரியில் கலக்கிறது.
அதிக அளவு வெள்ளநீா் ஆரணி ஆற்றில் வந்ததால் பெரும்பேடுகுப்பம், சோமஞ்சேரி மற்றும் தத்தைமஞ்சி வஞ்சிவாக்கம் ஆகிய இடங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டன.
இதனால் ரெட்டிபாளையம், பெரும்பேடு குப்பம், ஆசானபூதூா், வஞ்சிவாக்கம், திருப்பாலைவனம், செஞ்சியம்மன் நகா், போலாச்சியம்மன்குளம், வேளூா், எரியபிள்ளைகுப்பம், அத்தமனஞ்சேரி, காட்டூா் தத்தைமஞ்சி, கடப்பாக்கம், எா்ணாகுரச்சேரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது.
அதிகளவு மழை நீா் புகுந்த பெரும்பேடு குப்பம், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வருவாய்த் துறையினா் அழைத்து சென்று பொன்னேரியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனா்.