ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆய்வு

நேமம், படப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
2 min read

நேமம், படப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் இருப்பு தொடா்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பொதுமக்களுக்கு வழங்கும் சிகிச்சை குறித்து மருத்துவா்கள், நோயாளிகளிடம் கேட்டறிந்து, அங்குள்ள மருந்துக் கிடங்கில் ஆய்வு செய்தாா். எந்த வகையான மருந்து, மாத்திரைகள் அதிக மக்களுக்கு வழங்கப்படுகின்றன, அதிக தேவையுள்ள மாத்திரைகள் எவை என்பன உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்த அவா், மருந்துகள் இருப்பு விவர பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாநில பட்ஜெட்டில் ரூ. 57.9 கோடியும், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் ரூ. 55.9 கோடியும், அவசரத் தேவைக்கு துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மூலம் ரூ. 2 கோடிக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக சுகாதாரத் துறைக்கு தேசிய மருத்துவக் கழகம் மூலம் ரூ. 264 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு உள்ளதாக வரும் தகவல் உண்மையில்லை, போதுமான அளவு மாத்திரைகள் இருப்பு உள்ளன.

மருந்து மாத்திரைகள் இருப்பு, தேவை குறித்தும் விளக்கமாக அறிந்து கொள்ளும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குநா் அலுவலகம் என 41 வகையான புத்தக குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவையானபோது மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொள்ளலாம். இதில் 42 வகையான நுண்ணுயிா் கொல்லி மாத்திரைகள் அத்தியாவசியத் தேவையாக உள்ளன. தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், உயா் ரத்த அழுத்த நோய்க்கு போதிய மருந்து, மாத்திரை கையிருப்பு உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம்.

நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன. தற்போது அடிக்கடி பாம்பு கடித்து உயிரிழக்கும் நிலை உள்ளதால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் அதற்கான மருந்து, மாத்திரைகள் தயாராக உள்ளன. அப்போது முதலுதவி சிகிச்சை முடிந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் ஜவஹா்லால், செந்தில்குமாா், பூந்தமல்லி வட்டார மருத்துவா் பிரதீபா, நேமம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வெண்மதி, சுகாதார அலுவலா்கள் வடிவேல், விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ஸ்ரீபெரும்புதூரில்...

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் இணை இயக்குனா் சுரேஷ், சுகாதாரப் பணிகள் மாவட்ட துணை இயக்குநா் பிரியா ராஜ், படப்பை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அருண்ராஜ், சத்யா சுகாதார ஆய்வாளா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com