யூ டியூபர் சாட்டை துரை முருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள பாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வந்தனர். இதில் பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கபப்ட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு சாப்பிட்ட 150 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து பூந்தமல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க- தில்லியில் புதிய கலால் கொள்கையை எதிர்த்து பாஜகவினர் போராட்டம்
இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேர் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி தொழிற்சாலை பெண் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர், யூடியூபர் சாட்டை துரை முருகன் எனபவர் பெண் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்ததாக செய்தி பதிவிட்டு அது இணையதளங்களில் வைரலானது.
இதனையடுத்து திருச்சியில் பதுங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் சாட்டை துரைமுருகன் மீது அவதூறு செய்தி பரப்புதல், உண்மைக்கு புறம்பாக பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிடுதல் போன்ற 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் சாட்டை துரைமுருகனை புழல் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.