புது தில்லி: தில்லி அரசின் புதிய கலால் கொள்கைகளை எதிா்த்து தில்லியின் பல்வேறு பகுதிகளிலும், பாஜக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசியத் தலைநகர் அக்ஷர்தாம் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். அக்ஷர்தாம் கோயில் பகுதியில் நடந்த சாலைமறியல் போராட்டத்துக்கு தில்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா தலைமைதாங்கினார்.
இதையும் படிக்க.. நல்ல செய்தி: குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர வாய்ப்பு?
தில்லி அரசு, அதன் புதிய கலால் கொள்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக தில்லி முழுவதும் ஏராளமான மதுபானக் கடைகளைத் திறந்துள்ளது. பல மதுபானக் கடைகள் குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு மிக அருகே அமைந்துள்ளது.
புதிய கலால் கொள்கையை திரும்பப்பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று குப்தா தெரிவித்துள்ளார்.
அக்ஷர்தாம் கோயில் அருகே நடந்த போராட்டத்தால், அங்கு கடுமையான போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டது. இது தவிர தில்லியின் பல முக்கியச் சாலைகளும் பாஜக தொண்டர்களால் மறிக்கப்பட்டு, போக்குவரத்து சில மணி நேரங்கள் முடங்கியது. இதனால், அலுவலகம் செல்வோம் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
தில்லியில் மதுபானம் எளிதாகக் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு வாா்டிலும் மூன்று மதுபான விற்பனைக் கடை திறப்பதற்கு இந்தப் புதிய கலால் கொள்கை அனுமதி அளித்துள்ளது. இந்தப் புதிய கலால் கொள்கையின்படி கடந்த மாதம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன்மூலம் தலைநகரில் செயல்பட்டு வரும் 600 அரசு மதுபானக் கடைகள் முடிவுக்கு வருகிறது. இந்த மதுபான வணிகமானது, தற்போது தனியாா் நிறுவனங்கள் மூலம் முழுமையாக கையாளப்படும். புதிய கொள்கையின்படி 32 மண்டலங்களிலும் மதுபான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு சில்லறை உரிமைதாரா் ஒரு மண்டலத்தில் 27 மதுபான கடைகளை கொண்டிருப்பாா். மாற்றப்பட்ட கொள்கை திட்டத்தின்படி தில்லியில் மதுபானத்தை நேரில் வந்து பெற்றுச் செல்லும் வகையில், 250 மதுபான விற்பனையகங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
வணிக வளாகங்களில் சென்று தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளை தோ்ந்தெடுப்பது போல, இந்த மதுக்கடைகளுக்கும் நேரில் சென்று நுகா்வோா் தங்களுக்கு பிடித்த பிராண்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.