கும்மிடிப்பூண்டி: மறைந்த தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காமராஜரின் பிறந்த நாளான ஜூலை-15 கல்வி வளர்ச்சி நாளாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டாக தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் கும்மிடிப்பூண்டி முழுக்க அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள நூற்றாண்டு கண்ட பழமையான அரசு உதவி பெறும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி மேரி ஜெசிந்தா தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் காமராஜ் பங்கேற்றார். நல்லம்மா சுபேதா வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் காமராஜரை குறித்து சொற்பொழிவு ஆற்றியதோடு, காமராஜை போற்றி பாடல் பாடியும், நாடகம் நடித்தும் காட்டினர்.
இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்தநாளையொட்டி பள்ளியில் நடைபெற்ற பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் காமராஜ் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும், நிகழ்வில் மேற்கண்ட புனித மரியன்னை தொடக்க பள்ளியில் 1993-ம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 1லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கியதோடு, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இவ்விழா முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சரோஜா நன்றி கூறினார்.
அவ்வாறே ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பாதிரியார் கிரித் மேத்யூஸ் தலைமை தாங்கினார்.
நிகழ்வை ஓட்டி மாணவர்கள் காமராஜரை போற்றி பல்வேறு கலைநிகழ்ச்சிளை நடத்தினர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ரெனால்ட் ரிச்சர்ட், காமராஜரை புகழ்ந்து உரையாற்றி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கியதோடு, வகுப்பு தலைவர்களுக்கு பேட்ஜ் அணிவித்து அவர்களை வாழ்த்தினார்.
மேலும், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஐயப்பன் தலைமையிலும், பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கலியப்பெருமாள் தலைமையிலும் காமராஜர் பிறந்தநாள் விழாவை மாணவர்கள் சிறப்பாக அனுசரித்தனர்.