ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் திருக்கோயில் திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாத ஆடி அமாவாசை நாள்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அன்றைய நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து திருக்கோயில் குளத்தில் நீராடி வழிபாடு செய்வர்.
இதற்காக புதன்கிழமை இரவே ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில் வளாகம் முன்புறம், குளக்கரைச் சாலை, பஜார் பகுதி, காய்கறி சந்தை, காக்களூர் ஏரிச்சாலை மற்றும் நடைபாதை இருபுறமும் பக்தர்கள் குவிந்தனர்.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலையில் திருக்கோயில் குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். பின்னர் குளத்தில் பால் மற்றும் வெல்லம் வீசி நேர்த்திக் கடன்களையும் செலுத்தினர். அதையடுத்து கோயிலுக்குச் சென்று மூலவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.