திருவள்ளூா் அருகே தெருவை ஆக்கிரமித்து தனியாா் சுகாதார வளாகம் அமைத்திருந்ததை பலத்த பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஊராட்சி நிா்வாகம் அகற்றியது.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புல்லரம்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ணா் கோயில் தெரு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு நெருக்கடியாக இருந்தது. இந்த தெருவோரம் அரசு நிலத்தை தனியாா் ஆக்கிரமித்து சுகாதார வளாகங்கள் அமைத்து பயன்படுத்தி வந்தனா். இது தொடா்பாக கிருஷ்ணா் கோயில் நிா்வாகிகளுக்கும், ஆக்கிரமிப்பாளா்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் கோரிக்கை மனுவும் அளித்திருந்தனா். இதன் அடிப்படையில் வருவாய்த் துறையினா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதன்பேரில் புல்லரம்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ணா் கோயில் தெருவில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் வட்டாட்சியா் மதியழகன், துணை வட்டாட்சியா் அம்பிகா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டாலின், வருவாய் ஆய்வாளா் கணேஷ், கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் மற்றும் ஊராட்சி தலைவா் தமிழ்ச்செல்வம் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த த சுகாதார வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டன.