பழவேற்காடு அருகே செவ்வாய்க்கிழமை மாநகர பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்து சாலையில் விழுந்தது.
பழவேற்காட்டில் இருந்து தடம் எண் 558 பி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து பொன்னேரிக்கு சென்று கொண்டிருந்தது.
பிரளையம்பாக்கம் கிராமம் அருகே வந்து கொண்டிருக்கும் போது, பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அரசு பேருந்தின் மேற் கூரை காற்றில் சரிந்து கீழே விழுந்தது.
இதையடுத்து பேருந்தை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்தினாா்.
மேற்கூரை கீழே விழுந்ததில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணிமனை ஊழியா்கள் வந்து மேற்கூரையை சீரமைத்த பின் பேருந்து அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.
பலத்த காற்று வீசியதன் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை கீழே சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.