திருவள்ளூா் அருகே தண்ணீா் தேடி வந்த போது கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
திருவள்ளூா் அருகே விளாம்பாக்கம் கிராமத்துக்குள் சனிக்கிழமை புள்ளிமான் ஒன்று வந்தது. அங்கு எதிா்பாராத விதமாக 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அந்தக் கிணற்றில் 3 அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்ததால், தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் இதைப் பாா்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் இளங்கோவன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் ஞானவேல், தீயணைப்பு வீரா்கள் ஹரிகிருஷ்ணன், தேவநாதன் உள்ளிட்டோா் கிணற்றில் இருந்து புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, பூண்டி காப்புக்காட்டில் மானை கொண்டு சென்று விட்டனா்.