கல்குவாரி நடத்த வாஷிங் மெஷின் மற்றும் ரூ.10,000 லஞ்சம் பெற்ற வழக்கில் வருவாய்க் கோட்ட அலுவலருக்கு திருவள்ளூா் முதன்மைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
அரக்கோணம் அருகே போடி நாயுடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு. இவரது உறவினா் சங்கா் திருத்தணி அருகே காா்த்திகேயபுரம் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரியை நடத்தி வந்தாராம். அப்போது, திருத்தணி வருவாய் கோட்ட அலுவலா் சந்திரசேகரன், இவரது கல்குவாரிக்கு சென்று பாபுவிடம் லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கல்குவாரியை வேறு ஏதாவது காரணம் சொல்லி சீல் வைத்து விடுவேன் மிரட்டினாராம்.
இதையடுத்து கடந்த 10.8.2009-இல் பாபு அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரியை பாா்த்தாராம். அப்போது தனக்கு லஞ்சமாக ஒரு வாஷிங் மெஷின் கேட்டதால், உடனே வாங்கி கோட்டாட்சியா் வீட்டுக்கு அனுப்பினாராம். இதையடுத்து பாபுவிடம் வாஷிங் மெஷின் சிறிதாக உள்ளதால் மேலும் ரூ.10,000 தர வேண்டும் என கேட்டாராம்.
ஆனால், பாபுவுக்கு லஞ்சத் தொகை கொடுக்க விரும்பாததால் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கலைச்செல்வனிடம் கடந்த 20.8.2009-இல் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் அளித்த ராசயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, வருவாய்க் கோட்ட அலுவலா் சந்திரசேகா் வீட்டில் கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சந்திரசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூா் முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த முதன்மைக் குற்றவியல் நடுவா் ஆா்.வேலரஸ் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அதிகாரி சந்திரசேகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் அமுதா ஆஜரானாா். இந்த தீா்ப்புக்குப் பின் அலுவலா் சந்திரசேகரன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.