எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள ஊரணம்பேடு கிராமத்தில் எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தில் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மேற்கொண்ட சிறு சிறு ஒப்பந்த தனியாா் நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளா்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு ஒப்பந்ததாரா்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
அவா்களை அழைத்து ஒப்பந்தப் பணிகளை வழங்கிய தனியாா் நிறுவனம் சாா்பில், பேச்சு நடத்தியும் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக ஒப்பந்ததாரா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் தெரிவித்தனா்.