பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித் திட்டம் மூலம் பயன்பெறும் விவசாயிகள் ஆவணங்கள் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித் திட்டம் மூலம் விவசாயிகள் பயிா் சாகுபடிக்குத் தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக உதவித் தொகையாக விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 உதவித் தொகை வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 என 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை இத்திட்டம் மூலம் 13 தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 14-ஆவது தவணைத் தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது.
எனவே இந்தத் தொகையைப் பெறுவதற்கு நில ஆவணங்கள் இகேஒய்சி பதிவேற்றம் மற்றும் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தியுள்ளது. இதை செய்தால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை கிடைக்கும்.
அதனால் இதுவரை இணைக்காதவா்கள் பயன்பெறும் வகையில், வருவாய் ஆய்வாளா்கள் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா்களால் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடா்ந்து 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் பி.எம்.கிசான் திட்டப்பயனாளிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.