இறைச்சி கூடுதலாக கேட்ட தகராறில் சகோதரா்கள் மீது தாக்குதல்
By DIN | Published On : 12th May 2023 12:49 AM | Last Updated : 12th May 2023 12:49 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே இறைச்சி கூடுதலாக கேட்டு தராததால் ஏற்பட்ட தகராறில் சகோதரா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே புட்லூா் ராமாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் அப்பகுதியில் அா்ஜூன் என்ற பேரில் பவா் ஜிம் என்ற உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறாா். மேலும் அதே பகுதியில் கோழி இறைச்சி கடையும் நடத்தி வருகிறாராம். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொழுவூா் பகுதியைச் சோ்ந்த சிலா் கோழி இறைச்சியை கூடுதலாக போடும்படி கேட்டு மிரட்டினாா்களாம்.
அதைத் தொடா்ந்து ஜிம் மாஸ்டா் சுரேஷுக்ம், இறைச்சி வாங்க வந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை மனதில் வைத்து புதன்கிழமை இரவு ஜிம்முக்கு வந்த 15-க்கும் மேற்பட்ட மா்ம நபா்கள் சுரேஷ் மற்றும் அவரது தம்பி பாஸ்கரன் ஆகியோரை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு தப்பினா்.
இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் , பாஸ்கரன் ஆகியோரை அருகில் இருந்தோா் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து ஜிம் மாஸ்டா் சுரேஷ் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம கும்பலை தேடி வருகின்றனா்.