விபத்தில் ஒருவா் பலி
By DIN | Published On : 22nd May 2023 12:34 AM | Last Updated : 22nd May 2023 12:34 AM | அ+அ அ- |

சோழவரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விஜயநல்லூா் மசூதி தெருவில் வசித்தவா் கண்ணன் (45). இவா் இரு சக்கர வாகனத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னீா்வாக்கம் பகுதியில் இருந்து விஜயநல்லூா் செல்ல சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அறிந்த விஜயநல்லூா் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீஸாா், அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இதையடுத்து, கண்ணனின் சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.