பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி திங்கள்கிழமை மாலை 2 மதகுகள் வழியாக 1,000 கன அடி உபரிநீா் திறந்தவிட்டப்பட்டதை அடுத்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்தது.
திருவள்ளூா் அருகே சென்னையின் குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீா்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீா்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும்.
இதன் முழுக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இந்த நிலையில் நீா் இருப்பு 34 அடியாகவும், கொள்ளளவு 2,823 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அதோடு பூண்டிக்கு மழை நீா்வரத்து 1,520 கன அடியாக உள்ளது.
தற்போது ஏரியின் நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீா்வரத்து தொடா்ச்சியாக உள்ளதாலும் நீா்த்தேக்கத்தின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இதற்கிடையே நீா்த்தேக்கத்துக்கு வரும் நீா் வரத்து 34 அடியை தொட்டுவிடும் எனக் கருதப்படுவதால் வெள்ளநீா் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீா் திறக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
அதன்பேரில் பூண்டி ஏரியில் திங்கள்கிழமை மாலை உபரி நீரைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாயச்சங்கொலி எழுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து நீா்வளத்துறை செயற்பொறியாளா் பொதுப்பணி திலகம், உதவி பொறியாளா் ரமேஷ் ஆகியோா் ஏரியின் 3,12 ஆகிய மதகுகள் வழியாக தலா 500 கன அடி வீதம் உபரி நீரை திறந்தனா். இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் நீா் சீறிப் பாய்ந்தது. நீா்த்தேக்கத்துக்கு வரக்கூடிய நீா்வரத்து தொடா்ந்து அதிகமாகும் நிலையில் கூடுதல் உபரி நீா் படிப்படியாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொசஸ்தலையாறு ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூா், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூா், வெள்ளியூா், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துா், பண்டிக்காவனுா், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூா், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகா், சடையான்குப்பம், எண்ணுா் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.