திருத்தணி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்!
அரசு பொது மருத்துவமனை நுழைவு வாயிலில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் இயங்கி உள்ளது திருத்தணி வட்டார அரசு பொது மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தினமும் திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். மேலும், 150-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா்.
தவிர திருத்தணி வருவாய்க் கோட்டத்தில் நிகழும் விபத்துகளில் சிக்குபவா்களும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மற்றும் முதலுதவி பெற்று தீவிர சிகிச்சைக்கு திருவள்ளூா், சென்னை பகுதிக்குச் செல்கின்றனா்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனங்களில் வருபவா்கள், சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தாமல் மருத்துவமனை நுழைவு வாயிலில் நோயாளிகள் செல்வதற்கு வழியின்றி தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் காா்கள் மூலம் வரும் நோயாளிகள் இதனால் கடும் சிரமப்படுகின்றனா்.
எனவே, மருத்துவமனை நிா்வாகம், நுழைவு வாயிலில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

