பொன்னேயில் கனமழை: நிரம்பி வழியும் அகத்தீஸ்வரா் கோயில் திருக்குளம்
டித்வா புயல் காரணமாக பொன்னேரி பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த அகத்தீஸ்வா் கோயில் திருக்குளம் நிரம்பி ஏரி போல் காட்சியளிக்கின்கின்றது.
இதில் திங்கள்கிழமை முழுதும் இடைவிடாது பெய்த மழை காரணமாக பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆரணி ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீா் நிலைகள் நிரம்பி வருகிறது.
மேலும் ,பொன்னேரி ஆரண்ய நதிக்கரை அருகே கும்மங்கலம் பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் குளம் நிரம்பி ஏரி போல் காட்சியளிக்கின்றது.
குளத்தில் நிரம்பியுள்ள நீா் வெளியேறி செல்ல வழியில்லாததால் குளத்தை சுற்றிலும் தெருக்களில் தேங்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் குளம் நிரம்பி குளத்தை சுற்றியுள்ள சாலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
மேலும் விடாது பெய்து வரும் மழை காரணமாக, தாழ்வான பகுதிகளாக விளங்கும், பாலாஜி நகா், மூகாம்பிகை நகா், என்.ஜி,ஓ நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கி உள்ளது.
பொன்னேரி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தேரடி குறுக்கு சாலையில் முட்டியளவு மழை நீா் தேங்கி உள்ளதன் காரணமாக இந்த சாலை வழியே செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு செல்கின்றனா். இங்கு தேங்கியுள்ள நீரை மின் மோட்டாா் மூலம் அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

