பூந்தமல்லியில் முறையாக கட்டப்படாத வடிகாலால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நகர்மன்றத்தலைவர் காஞ்சனா சுதாகர் உத்தரவிட்டார்.
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 11-ஆவது வார்டு லட்சுமி நகர் சீனிவாசா நகர் பகுதியில் நீண்ட நாள்களாக மழைநீர் தேங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்த பகுதியில் நகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வடிகால் முறையாக கட்டப்படததால், அதிலிருந்து மழைநீர் வெளியேற வழியில்லை. மேலும், சாலை மட்டத்திற்கு வடிகால் கட்டப்பட்டுள்ளதால், வடிகால் நிரம்பி சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வடிகால் கட்டும் போது அதில் வரும் தண்ணீர் வெளியேறும் வழியுடன் கட்டுவது தான் வழக்கம். ஆனால் அதிகாரிகள் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வடிகால் கட்டியுள்ளனர் என்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகர்மன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேலும் சம்பவ இடத்த்துக்கு நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து, உயர்திறன் கொண்ட 3 மின் மோட்டார்களை கொண்டு வந்து தேங்கிய மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்தில் தேங்கிய மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டதுடன் அந்தப் பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் பிளீச்சிங் பவுடர், கொசுமருந்து தெளிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என்று நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடுவீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது. வடிகால்வாயை முறையாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.