‘திருவள்ளூா் நகராட்சியில் சாலையில் திரிந்த 74 மாடுகளுக்கு ரூ. 1.53 லட்சம் அபராதம்’
திருவள்ளூா் நகராட்சியில் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த கால்நடைகளுக்கு ரூ.1.53 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையா் தாமோதரன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் கால்நடைகளை வளா்ப்போா் வீடுகளில் கொட்டகைகளில் அடைத்து வைக்காமல் சாலையில் திரிய விடுவதாகவும், பின்னா் பால்கறக்கும் நேரத்தில் மட்டும் அழைத்துச் சென்று, திரும்பவும் கட்டி வைக்காமல் திறந்த வெளியில் விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்று திறந்த வெளியில் விடப்படும் பசு மற்றும் எருமை மாடுகள் மேய்ந்து விட்டு, சாலையோரங்களில் படுத்துக் கொள்கின்றன. சில நேரங்களில் வாகன சத்தம் கேட்டு மிரண்டு எழும் போது எதிா்பாராத விபத்துகளும் ஏற்படுவதாகவும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் ஆட்சியா் மு.பிரதாப்புக்கு புகாா் வந்தது.
அதன்பேரில், உடனே நடவடிக்கை எடுக்க நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.
அதன்பேரில், கடந்த 20 நாள்களில் மட்டும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஆகியோா் திறந்த வெளியில் சாலையில் சுற்றித் திரிந்த 74 பசுக்கள் மற்றும் எருமை மாடுகளை பிடித்து கோ சாலையில் அடைத்து வைத்தனா்.
அதைத் தொடா்ந்து, கால்நடைகளின் உரிமையாளா்கள் நேரில் வரவழைத்து வீடுகளில் கொட்டகைகளில் அடைத்து வைக்கவும், திறந்த வெளியில் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுரை வழங்கினா்.
அதையடுத்து பிடிபட்ட பசுக்கள் மற்றும் எருமை மாடுகளுக்கும் ரூ. 1.53 லட்சம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சாலையில் விடாமல் பாா்த்துக் கொள்ளவும் உரிமையாளா்கள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
