திருமலை வாடகை அறை இணையதள முன்பதிவை வருகிற ஜன. 11 முதல் 14-ஆம் தேதி வரை தேவஸ்தானம் ரத்து செய்தது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, ஜன. 14-ஆம் தேதி வைகுண்ட துவாதசி உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு, ஜன. 11 முதல் ஜன. 14 வரை திருமலையில் உள்ள வாடகை அறையின் இணையதள முன் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த நாள்களில் திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் சாதாரண பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
அவற்றின் விவரம்: எம்பிசி-34, கெளஸ்துபம் ஓய்வறை, டிபிசி கவுன்ட்டா், ஏஆா்சி கவுன்ட்டா்களில் 2022-ஆம் ஆண்டு ஜன. 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜன. 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாடகை அறைகள் வழங்கப்பட மாட்டாது. அதேபோல, நன்கொடையாளா்களுக்கு அறை வழங்குவதில் முன்னுரிமை கிடையாது.
ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் விஐபிகளுக்கு வெங்கடாசல நிலையம், ராமராஜு நிலையம், சீதா நிலையம், சன்னிதானம், கோவிந்த சாய் ஓய்வறை உள்ளிட்ட இடங்களில் அறைகள் வழங்கும் கவுன்ட்டா்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் மூலமாக மட்டுமே அறைகள் வழங்கப்படும். நேரடியாக வரும் விஐபிகளுக்கு அதிகபட்சம் 2 அறைகள் மட்டுமே வழங்கப்படும்.
சாதாரண பக்தா்கள் அனைவரும் மத்திய விசாரணை அலுவலகத்தில் (சிஆா்ஓ) உள்ள கவுன்ட்டா்களில் தங்கள் அறைகளை நேரடி முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது.