திருமலை ஏழுமலையான் கோயிலில் பெளா்ணமியை ஒட்டி தேவஸ்தானம் தங்க கருட சேவை உற்சவத்தை திங்கள்கிழமை நடத்தியது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருடசேவையை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் திருமலையில் திரள்வா்.
இதில் பங்கேற்க இயலாத பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று தேவஸ்தானம் மாதந்தோறும் பெளா்ணமியன்று இரவு கருட சேவையை நடத்த முடிவு செய்து, அதை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அதன்படி திங்கள்கிழமை புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு தேவஸ்தானம் கருட சேவை உற்சவத்தை நடத்தியது. மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வாகனத்தின் முன்பு திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாராயணம் செய்தபடி சென்றனா். இதில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். இந்த கருட சேவை தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.