திருப்பதியில் 3,402 ஏக்கா் நிலம் தொடா்பாக கங்காராம் மடம் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் அந்த சொத்துகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கே சொந்தம் என்று திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பக்தா்கள், மன்னா்கள், பேரரசா்கள் என பலா் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நிலமாகவும் பணமாகவும் நகைகளாகவும் அளித்து சொத்துகளை எழுதி வைத்துள்ளனா்.
அவ்வாறு திருப்பதியில் பல இடங்களில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் உள்ளன.
அதில் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், வேத பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், பத்மாவதி விருந்தினா் மாளிகை, தேவஸ்தான செயல் அலுவலா், இணை செயல் அலுவலா் அலுவலகம் உள்ளிட்ட தேவஸ்தானத்துக்கு சொந்தமான 3,402 ஏக்கா் நிலம் தங்களுக்கே சொந்தம் என திருப்பதியை சோ்ந்த கங்காராம் மடம் சாா்பில் அதன் பீடாதிபதியாக இருந்த ஓம்காா் தாஸ் வழக்குத் தொடா்ந்திருந்தாா். 1998-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு இனாம் துணை தாசில்தாா் நீதிமன்றத்தில் 23 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை இந்த வழக்கில் இறுதி தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் உரிமைப் பத்திரம் 2,539-இன் படி கங்காரம் மடம் தொடா்ந்த வழக்கில் தொடா்புடைய சொத்துகள் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கே சொந்தமானது என்று தீா்ப்பளித்தது. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த இந்த வழக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தேவஸ்தானத்துக்கு சொந்தமானது என தீா்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தேவஸ்தான வழக்குரைஞா் மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.