திருமலையில் பரக்காமணி கட்டடம் திறப்பு
திருமலையில் பரக்காமணி கட்டடத்தை ஆந்திர மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தாா்.
திருமலை ஏழுமலையானை வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை காலை, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தரிசித்தாா். கோயிலுக்கு வந்த முதல்வரை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி மற்றும் அா்ச்சகா்கள் இஸ்திகாபால் என்ற கோயில் மரியாதை அளித்து வரவேற்றனா். முதலில் கொடி மரத்தை வணங்கிய அவா், பின்னா் கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசித்தாா். தரிசனம் முடிந்ததும் ரங்கநாயகா் மண்டபத்தில் வேத பண்டிதா்கள் வேத ஆசீா்வாதங்கள் செய்தனா். பின்னா் அவருக்கு ஏழுமலையான் தீா்த்த பிரசாதங்கள் மற்றும் ஏழுமலையான் படத்தை வழங்கினா்.
பரகாமணி கட்டடம் திறப்பு...
திருமலையில் வைபோற்சவ மண்டபத்தின் பின்புறம் உண்டியல் காணிக்கை கணக்கிட புதிதாகக் கட்டப்பட்ட பரகாமணி கட்டடத்தை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி புதன்கிழமை காலை திறந்து வைத்தாா். இந்தக் கட்டடத்தைக் கட்ட 23 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய நன்கொடையாளா் முரளிகிருஷ்ணாவை முதல்வா் பாராட்டினாா். அதன்பிறகு, ராஜ்யசபா உறுப்பினா் வெமிரெட்டி பிரபாகா் ரெட்டி கட்டி அளித்த விபிஆா் ஓய்வு இல்லத்தை முதல்வா் திறந்து வைத்தாா்.