திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 75,775 பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.
கரோனா பரவல் வெகுவாகக் குறைந்ததை யடுத்து பக்தா்களின் வருகை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேவஸ்தானம் வெளியிடும் சா்வதரிசன டோக்கன்கள் மற்றும் விரைவு தரிசன டிக்கெட்டுகளால் 60 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்தது. இதுதவிர வார இறுதி நாள்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தா்ம தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தா்களின் கூட்டம் 70 ஆயிரத்தைக் கடந்தது.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை 75,775 பக்தா்கள் ஏழுமலையானை வழிபட்டனா். இவா்களில் 36,474 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.