திருக்கல்யாணத்துடன் நிறைவு பெற்றது பத்மாவதி பரிணய உற்சவம்

திருமலையில் நடந்து வந்த பத்மாவதி பரிணய உற்சவம் வியாழக்கிழமை மாலை திருக்கல்யாணத்துடன் நிறைவு பெற்றது.

திருப்பதி: திருமலையில் நடந்து வந்த பத்மாவதி பரிணய உற்சவம் வியாழக்கிழமை மாலை திருக்கல்யாணத்துடன் நிறைவு பெற்றது.

ஏழுமலையானுக்கும், பத்மாவதி தாயாருக்கும் நடக்கும் கல்யாண உற்சவத்தை தேவஸ்தானம் பத்மாவதி பரிணய உற்சவம் என்று அழைத்து வருகிறது. இந்த நிலையில், திருமலையில் பத்மாவதி பரிணய உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்காக தேவஸ்தானம் திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பிரம்மாண்டமாக கல்யாண மண்டபம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. முதல் நாள் கல்யாண மண்டபத்துக்கு யானை வாகனத்திலும், 2-ஆம் நாள் குதிரை வாகனத்திலும் எழுந்தருளிய மலையப்ப ஸ்வாமி, நிறைவு நாளான வியாழக்கிழமை அவருக்கு மிகவும் பிடித்தமான கருட வாகனத்தில் எழுந்தருளினாா்.

அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கில் எழுந்தருளினா். அங்கு அவா்களை வரவேற்று, மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், சீா்வரிசைகள் அளித்தல், ஊஞ்சல் சேவை, தேங்காய் உருட்டுதல், நலங்கு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் திருமலை ஜீயா்கள் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா், மாங்கல்ய தாரணம் நடந்தேறியது. தொடா்ந்து, தம்பதி சமேதராய் அவா்கள் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

கரோனோ பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தா்களின்றி நடத்தப்பட்ட இந்த பத்மாவதி பரிணய உற்சவம், இந்தாண்டு பக்தா்கள் கலந்து கொள்ள தேவஸ்தானம் அனுமதி அளித்தது. இதை முன்னிட்டு, திருமலையில் ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன. மேலும், நிறைவு நாளன்று திருமலையில் வாண வேடிக்கைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கோயில் விழாக்களில் வாண வேடிக்கை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால், தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக அதை ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com