ஆரணி கல்வி மாவட்ட அளவிலான உடல் கல்வி செயல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் இருந்தன. தற்போது கூடுதலாக ஆரணி, போளூர், செங்கம் ஆகிய 3 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 5 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆரணி கல்வி மாவட்டம் சார்பில், வட்டார அளவிலான போட்டிகள் நடத்துவதற்காக உடல் கல்வி செயல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடல் கல்வி ஆய்வாளர் முனியன் தலைமை வகித்தார். இதில், ஆரணி, செய்யாறு, பெரணமல்லூர், மேற்குஆரணி ஒன்றியம், தெள்ளார் ஆகிய பகுதிகளிலிருந்து உடல் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆரணி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் வட்டார விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். உடல் கல்வி இயக்குநர் எஸ்.சீனிவாசன் நன்றி கூறினார்.