மதுக் கடையை இடமாற்றக் கோரி போராட்டம்
By DIN | Published On : 26th April 2019 01:01 AM | Last Updated : 26th April 2019 01:01 AM | அ+அ அ- |

செங்கம் அருகே டாஸ்மாக் மதுக் கடையை இடமாற்றக் கோரி கடை முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை கிராமப்புறத்தில் இருப்பதால் நகர்புறத்தில் இருந்து ஏராளமானோர் மது அருந்த இங்கு வருகின்றனர்.
இதனால், இந்தக் கடையைச் சுற்றி பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை கூட்டம் அலைமோதுகிறது.
இவ்வாறு மது அருந்த வரும் நபர்களில் சிலரால் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றனவாம்.
மேலும், பொரசப்பட்டு தண்டா கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனராம். இவர்கள் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்பது, இல்லையென்றால் மனைவியை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் வியாழக்கிழமை ஒன்றுகூடி மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.